இன்று உங்களுக்குக்கான கிருபை
18 ஜூன் 2026
தலைப்பு:மோசேயின் வாழ்வில் ஒளியின் நியதி
வேதவசனம்: அப்போஸ்தலர் 7:23-36;
ஒளியின் நியதியானது அறிவு,புரிந்துகொள்ளுதல் மற்றும் ஞானம் ஆகிய மூன்று பரிமாணங்களின் வழியாக செயல்படுகிறது.தேவனுடைய நோக்கம் நிறைவேறும் வரை, பரிசுத்த ஆவியானவர் ஒரு விசுவாசியை எவ்வாறு இந்தப் பரிமாணங்களின் ஊடாக வழிநடத்துகிறார் என்பதை மோசேயின் வாழ்க்கை அழகாக வெளிப்படுத்துகிறது.
நாற்பது வயதில், மோசேயின் இருதயத்தில் அறிவு உதயமானது. அப்போஸ்தலர் 7:23-ன் படி, “தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரை சந்திப்பது அவன் மனதிலே தோன்றியது.” தன்னை ஒரு விடுதலையாளராகத் தேவன் அழைத்திருக்கிறார் என்பதை அவன் அறிந்திருந்தான். தன் மூலமாக தேவன் அவர்களை விடுவிப்பார் என்பதைத் தன் சகோதரர்கள் புரிந்துகொள்வார்கள் என்று மோசே நினைத்ததாக அப்போஸ்தலர் 7:25 கூறுகிறது.
இருப்பினும்,அறிவு மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை.இஸ்ரவேலர்கள் மோசேக்கான தேவனுடைய நோக்கத்தைப் புரிந்துகொள்ளவில்லை; அதேவேளையில்,தேவனுடைய வழிமுறையைப் புரிந்துகொள்வதில் மோசேயும் குறைபாடுடையவனாக இருந்தான்.மனித பலத்தினாலும் வாளினாலும் தேவனுடைய நோக்கத்தை நிறைவேற்ற அவன் முயன்றான்; அதன் விளைவாகத் தோல்வியும், வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகால வாழ்க்கையும் அவனுக்குக் கிடைத்தன.
அந்த நாற்பது ஆண்டுகளில், தேவன் மோசே மற்றும் இஸ்ரவேல் ஆகிய இரு தரப்பிலும் கிரியை செய்தார். தெய்வீக செயல்பாடுகளின் மூலம் மோசே புரிந்துகொள்ளுதலில் வளர்ந்தான்;அதாவது, தேவனுடைய நோக்கங்களை மனிதத் திறமையால் அல்ல, மாறாக அவர் மீது சார்ந்திருப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும் என்பதைக் கற்றுக்கொண்டான்.
இறுதியில்,எரியும் முட்செடி அனுபவம் தொடங்கி எகிப்திலிருந்து வெளியேறும் பயணம் முழுவதும்,மோசே ஞானம் என்னும் பரிமாணத்திற்குள் பிரவேசித்தான். அவன் பரிசுத்த ஆவியானவருக்கும் தேவனுடைய திட்டத்திற்கும் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்தான்.
விடுதலை என்பது வாளினால் அல்ல, மாறாக அடையாளங்கள், அற்புதங்கள், அதிசயமான செயல்கள் மற்றும் தெய்வீகத் தலையீடுகள் மூலம் வெளிப்படும் தேவனுடைய வல்லமையால் உண்டாகும் என்பதை அவன் உணர்ந்தான்.
மோசேயின் இருதயத்தில் அறிவாகத் தொடங்கிய ஒன்று, உள்ளான மாற்றத்தின் மூலம் புரிந்துகொள்ளுதலாக மாறி, தெய்வீக ஞானத்தின் மூலம் வெளிப்பட்ட நிஜமாக உருவெடுத்தது.
மேலும், இயற்கையான சிந்தனைக்குத் தர்க்கரீதியாகத் தோன்றாத வழிகளில் ஞானம் பெரும்பாலும் நம்மை வழிநடத்துகிறது. இஸ்ரவேலர்களைப் பெலிஸ்தியரின் தேசத்தின் வழியாக செல்லும் குறுகிய பாதையில் வழிநடத்தாமல், வனாந்தரத்தின் வழியாக செல்லும் நீண்ட பாதையில் தேவன் வழிநடத்தினார் என்று யாத்திராகமம் 13:17-18 கூறுகிறது. மனித சிந்தனை மிகக் குறுகிய பாதையைத் தேடுகிறது; ஆனால் தெய்வீக ஞானமோ ஆவியானவரின் பாதையைத் தேர்ந்தெடுக்கிறது—அதுவே மிகவும் பாதுகாப்பான மற்றும் மிகுந்த பலன் தரும் பாதையாகும்.
இதிலிருந்து நாம் பெறும் பாடம் தெளிவானது: அறிவு தேவனுடைய அழைப்பை வெளிப்படுத்துகிறது; புரிந்துகொள்ளுதல் தேவனுடைய வழிமுறையை வெளிப்படுத்துகிறது; ஞானம் தேவனுடைய காலத்தையும், பாதையையும், நோக்கத்தின் வெளிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய வார்த்தையின் மூலம் சத்தியத்தின் ஆவிக்கு நாம் நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, ஆவிக்குரிய மெய்மைகள் நம் வாழ்வில் காணக்கூடிய வெளிப்பாடுகளாக மாறும் வரை அவர் நம்மை இந்த பரிமாணங்களின் ஊடாக வழிநடத்துகிறார்.
ஜெபம்
அன்புத் தகப்பனே, பரிசுத்த ஆவியானவரின் ஊழியத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமது நோக்கத்தை அறியும் அறிவையும், உமது வழிகளைப் புரிந்துகொள்ளும் உணர்வையும், உமது கால அட்டவணைக்கும் வழிமுறைகளுக்கும் ஏற்ப நடப்பதற்கான ஞானத்தையும் எனக்குத் தந்தருளும். மனித பலத்தை சார்ந்திருப்பதிலிருந்து என்னை விடுவித்து, உமது ஆவிக்கு முழுமையாகக் கீழ்ப்படிய எனக்குக் கற்றுத்தாரும்.என் முன்னேற்றத்திற்காக நீர் நியமித்த பாதையில் என்னை வழிநடத்தும்; இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன். ஆமென்.
விசுவாச அறிக்கை
சத்தியத்தின் ஆவியானவர் என்னை வழிநடத்துகிறார். தெய்வீக அறிவையும், புரிதலையும், ஞானத்தையும் நான் பெற்றுக்கொள்கிறேன். நான் மனித ரீதியிலான சிந்தனையையோ அல்லது பலத்தையோ சார்ந்திருக்காமல், தேவனுடைய ஞானத்தையே சார்ந்திருக்கிறேன். கர்த்தர் என்னை அவருடைய பரிபூரணமான வழியிலும், சரியான காலத்திலும் வழிநடத்துகிறார். என் இருதயத்தில் அவர் வைத்திருக்கும் ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அவருடைய வல்லமையினாலும் மகிமையினாலும் நிறைவேறும். நான் தெய்வீக வெளிச்சத்தில் நடக்கிறேன்; என் வாழ்விற்கான தேவனுடைய நோக்கத்தின்படி முன்னேறிச் செல்கிறேன்; இயேசுவின் நாமத்தில். ஆமென்
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்.ஆமென். அல்லேலூயா!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
