இன்று உங்களுக்குக்கான கிருபை
3 ஆகஸ்ட் 2026
பரிசுத்தத்தின் ஆவி உங்களை மெய்ப்பிக்கிறார்!
வேதவசனம்:
“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினால், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய குமாரனென்று வல்லமையாய் வெளிப்படுத்தப்பட்டார்.”ரோமர் 1:4
பிரியமானவர்களே,
ஆகஸ்ட் மாதமாகிய இந்த புதிய மாதத்திற்கு உங்களை வரவேற்கிறேன். இம்மாதம் ‘பரிசுத்தத்தின் ஆவியின்’ மாதமாகும்.
பரிசுத்த ஆவியானவரின் மற்றொரு புதிய பரிமாணமான “பரிசுத்தத்தின் ஆவி” (The Spirit of Holiness) குறித்து நம் பிதாவானவர் நமக்கு வெளிச்சம் தருவார்.
இயேசுவின் பூமிக்குரிய ஊழியக் காலத்தில், தாம் தேவனுடைய குமாரன் என்று அவர் தைரியமாக அறிவித்தார். இந்தக் கூற்றை மதத் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர் தம்மை தேவனுக்கு சமமாக்கிக்கொண்டதால், அவர் மீது தூஷணக் குற்றம் சாட்டினர் (யோவான் 5:17–18; யோவான் 10:30–33). பிலாத்துவின் முன்னிலையில், தாம் தேவனுடைய குமாரன் என்று உரிமை கோரியதற்காக அவர் மரணத்திற்குப் பாத்திரமானவர் என்று அவர்கள் வலியுறுத்திக் கூறினர் (யோவான் 19:6–8). இந்தக் முக்கியக் காரணத்திற்காகவே, இயேசு சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டார்.
ஆயினும், மனிதர்களின் தீர்ப்பு தேவனுடைய தீர்ப்பாக இருக்கவில்லை.
இயேசுவின் மீது தங்கியிருந்த பரிசுத்தத்தின் ஆவியானவர், அவரை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்ததன் மூலம் அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் மெய்ப்பித்தார்.
இயேசு உண்மையிலேயே தம்முடைய குமாரன் என்பதை வெளிப்படுத்தும் தேவனுடைய பகிரங்கமான அறிவிப்பே அந்த உயிர்த்தெழுதல் ஆகும்.
எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் பரலோகத்தின் இறுதியான பதிலாக அந்த உயிர்த்தெழுதல் அமைந்தது.
இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்ப்பித்து அவரை மெய்ப்பித்த பரிசுத்தத்தின் ஆவியானவரே அந்தப் பரிசுத்த ஆவியானவர் ஆவார்.
இன்றும்! கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும் அவர் தொடர்ந்து மெய்ப்பிக்கிறார்.
விசுவாசிகளாகிய நாம், “கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாயிருக்கிறேன்” என்று தைரியமாக அறிக்கை செய்கிறோம்.
இந்த அறிக்கை பெரும்பாலும் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது, கேள்விக்குள்ளாக்கப்படுகிறது அல்லது எதிர்க்கப்படவும் செய்கிறது. ஆனால் பரிசுத்தத்தின் ஆவியானவர் கிறிஸ்துவினுடைய அடையாளத்தை மெய்ப்பித்தது போலவே, கிறிஸ்துவுக்குள் உங்களுடைய புதிய அடையாளத்தையும் மெய்ப்பிக்கிறார். இம்மாதத்தில் தேவனுடைய பிள்ளைகளின் வாழ்வில் தேவன் அருளும் மெய்ப்பித்தலை நாம் காணப்போகிறோம்.
எதிரான குரல்களைக் கண்டு அஞ்சாதீர்கள்.உங்கள் அடையாளம் மனிதர்களின் கருத்துக்களால் அல்ல, மாறாக தேவனுடைய அறிவிப்பால் நிலைநாட்டப்படுகிறது. உங்கள் வாழ்வின் மீது தேவன் உரைத்ததை பரிசுத்தத்தின் ஆவியானவர் உறுதிப்படுத்துகிறார்.
ஜெபம்:
அப்பா பிதாவே , உம்முடைய சத்தியத்திற்கு சாட்சி பகரும் பரிசுத்தத்தின் ஆவியின் ஊழியத்திற்காக உமக்கு நன்றி. மனிதர்களின் கருத்துக்களில் அல்ல, கிறிஸ்துவிலேயே எனது அடையாளம் நிலைநிறுத்தப்பட்டிருப்பதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். எனது வாழ்க்கை தொடர்ந்து உமது நீதியின் மெய்மையை வெளிப்படுத்தவும், உமது நாமத்திற்கு மகிமை சேர்க்கவும் இடமளிப்பீராக; இயேசுவின் நாமத்தில். ஆமென்.
விசுவாச அறிக்கை:
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன் என்று தைரியமாகப் பிரகடனம் செய்கிறேன். நான் தேவனுடைய பிள்ளை என்பதற்கு பரிசுத்த ஆவியானவர் சாட்சி பகர்கிறார். என்னைக் குறித்த தேவனுடைய ஒவ்வொரு வாக்குத்தத்தமும் நிறைவேறும். நான் நீதி, வல்லமை, தயவு மற்றும் வெற்றியுடன் நடக்கிறேன். எனது வாழ்க்கை தேவனுடைய சத்தியத்திற்கு சான்றாக விளங்குகிறது; இயேசுவின் நாமத்தில்.ஆமென் 🙏.
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்.ஆமென். அல்லேலூயா!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
